25/05/2011

தலைக்கவசம் (ஹெல்மெட்) இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது!

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் தரக்கூடாது என மத்திய பிரதேச மாநிலம் போபால் மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போபாலிலுள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இந்த உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளதாக போபால் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகஙனங்களுக்கு பெட்ரோல் போடும்போது பிடிபடுபவர்களுக்கு ரூ.50 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மாநகர நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெட்ரோல் பங்குகளில் தகராறு செய்யும் எண்ணத்துடன் கூட்டம் கூடுவதைத் தடுக்கும் வகையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போபால் மாவட்ட ஆட்சியர் மனோஜ் வத்சவா இதுகுறித்து கூறுகையில், "கடந்த மே-10ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறிய 45,000 பேரிடம் இதுவரை ரூ.20 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வரும் மாணவர்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என அம்மாநில உயர்கல்வி துறை இதற்கு முன் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.