இங்கிலாந்தின் ரன் குவிப்புக்கு மழை முட்டுக்கட்டை
லண்டன், ஆகஸ்ட் 20 : லண்டன் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன்கள் குவித்திருந்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
2 – வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 457 ரன்கள் எடுத்திருந்தது.
இயான் பெல் 181 ரன்களுடனும், ஆன்டர்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 20) தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஆன்டர்சன் மேலும் 10 ரன்கள் சேர்த்து 13 ரன்களுக்கு
ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மோர்கன் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து இயான் பெல்லுடன் ரவி போபரா ஜோடி சேர்ந்தார்.
நங்கூரம் பாய்ச்சியது போல் நின்று விளையாடிய இயான் பெல் 331 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
அவரது அபார ஆட்டம் காரணமாக இங்கிலாந்து அணி 500 ரன்களை கடந்தது.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெல் 235 ரன்களில் (364 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்ஸர்) சுரேஷ் ரெய்னா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
பின்னர் ரவி போபராவுடன் மேட் பிரையர் இணைந்தார்.
மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன்கள் குவித்திருந்தது.
போபரா 44 ரன்களுடனும், பிரையர் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளும், சுரேஷ் ரெய்னா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடங்குவது தடைபட்டது.


<< Home