இறுதிப் போட்டியில் டோணி சிக்ஸர் விளாசிய பந்து ரூ. 21 லட்சத்துக்கு ஏலம்
டெல்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த ரன்னை எடுக்க கேப்டன் டோணி அதிரடியாக சிக்ஸருக்கு விளாசிய பந்து தற்போது ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை இடையிலான இறுதிப் போட்டியின்போது போட்டியை அட்டகாசமான சிக்ஸர் அடித்து முடித்தார் டோணி. அபாரமாக அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் மூலம் இந்திய ரசிகர்கள் 2வது உலகக் கோப்பையை தட்டிச் சென்றனர்.
இந்தப் பந்துதான் தற்போது ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களை தனது இணையதளம் மூலம் ஐசிசி ஏலத்தில் விடுகிறது. அதில் உலகக்கோப்பைப் போட்டியின் முக்கியப் பொருட்கள் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று இந்த பந்து. இப்பந்தை அதிகபட்சமாக ரூ. 21 லட்சத்திற்கு ஏலம் கேட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 52 பேர் ஏலம் கேட்டுள்ளனர். அதில் இதுதான் அதிகபட்ச தொகையாகும். இந்த ஏலம் ஏப்ரல் 6ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது.
அதேபோல இறுதிப் போட்டியின்போது டாஸ் போடப் பயன்படுத்தப்பட்ட நாணயமும் ஏலம் விடப்பட்டது. அது ரூ. 11.5 லட்சத்துக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதுவும் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நாணயத்தை 62 பேர் ஏலம் கேட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட பேட்கள், உலகக் கோப்பையின் மாதிரி கோப்பை உள்ளிட்டவையும் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா வென்ற உலகக் கோப்பையின் மாதிரிக் கோப்பையின் விலை 79 டாலராகவும், கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட பேட்கள் 499 டாலராகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கேப்டன் டோணி கையெழுத்திட்ட லித்தோகிராப் 199 டாலருக்கு வைக்கப்பட்டடுள்ளது.
ஐசிசி நடத்தும் இந்த ஏலம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் பயன்படுத்தப்பட்டு, இ பே ஏலம் மூலம் 50,000 பவுண்டுகளுக்கு ஏலம் போனது நினைவிருக்கலாம்.


<< Home