23/05/2011

மரியம்பிச்சை பலி: திருச்சி செல்கிறார் ஜெயலலிதா!

சாலை விபத்தில் பலியான அமைச்சர் மரியம் பிச்சையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.

திருச்சியில் இன்று காலை சென்னை சென்று கொண்டிருந்த போது சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியை காரி முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வாகனம் ஒன்று வந்ததால் டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பினார். அப்போது அருகில் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது அமைச்சரின் கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் முன்பகுதியில் அமர்ந்திருந்த அமைச்சர் மரியம் பிச்சை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் அதிமுகவினர் மருத்துவமனையின் முன்பு குவிந்தனர்.

அமைச்சர் மரியம் பிச்சை மரணத்திற்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், திருச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மரியம் பிச்சை இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்ல உள்ளார்.

மரியம் பிச்சையின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து சங்கிலியாண்டவர்புரத்தில் உள்ள மரியம் தியேட்டருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மரியம் பிச்சையின் உடல் அடக்கம் இன்று மாலை பாலக்கரையில் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.