பர்மிங்காம், ஆகஸ்ட் 12 : பர்மிங்காம் டெஸ்ட்டில் அலெஸ்டர் குக்கின் அபார சதம் காரணமாக இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 456 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது.
போட்டியின் 2-வது நாளான நேற்று (ஆகஸ்ட் 11) மழை தூறல் இருந்ததால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
கேப்டன் ஸ்ட்ராஸ் 52 ரன்களுடனும், குக் 27 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இருவரும் நேர்த்தியாக ஆடி ரன் குவித்தனர். இந்திய வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விக்கெட் எடுக்க முடியவில்லை. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 157 ரன்களை எடுத்தது.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பு இன்றியே இந்தியாவின் முதல் இன்னிங்சின் ஸ்கோரான 224 ரன்களைக் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இங்கிலாந்து அணி 186 ரன்கள் எடுத்திருந்தபோது, அமித் மிஸ்ராவின் சுழற்பந்தில் ஸ்ட்ராஸ் போல்டு ஆனார். அவர் 87 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய இயான் பெல் நிதானமாக ஆடி 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பிரவீண் குமார் பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த பீட்டர்சன் வழக்கம் போல சிறப்பாக விளையாடினார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய குக் சதமடித்தார். முந்தைய இரு டெஸ்ட் போட்டிகளிலும் தடுமாறிய குக் இந்த போட்டியில் பார்முக்கு வந்தார்.
இதற்கு முந்தைய இரு டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் அவர் முறையே 12,1,2,5 என சொற்ப ரன்களையே எடுத்திருந்தார்.
அதிரடியாக விளையாடிய பீட்டர்சன் 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அலெஸ்டர் குக்குடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார்.
அவர்கள் இருவரும் மேலும் விக்கெட்டுகள் விழாத வண்ணம் விளையாடினர்.
2 –வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 456 ரன்கள் குவித்தது.
அலெஸ்டர் குக் 182 ரன்களுடனும், மோர்கன் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்தின் 2 – வது இன்னிங்சில் 115 ஓவர்களை வீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் 46 உதிரி ரன்களை விட்டுக்கொடுத்தனர். இதில் 12 நோ பால் அடங்கும்.
இங்கிலாந்து அணி இதேபோல தொடர்ந்து சிறப்பாக விளையாடி 500 ரன்களுக்கு மேல் குவித்தால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கவே போராடும் நிலைக்கும் தள்ளப்படலாம்.