13/05/2011

தேர்தல் தோல்வி - கருணாநிதி மகிழ்ச்சி

சட்டமன்ற தேர்தலில்  ஆளும் திமுக கூட்டணி தோல்வியின் மூலம் திமுகவின் அதிகார போட்டி முடிவுக்கு வந்துள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். கருணாநிதியின் புதல்வர்களான ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் ஆட்சியிலும், கட்சியில் நீயா நானா போட்டியில் ஸ்டாலினே இதுவரை முன்னனியில் இருந்து வந்தார். எனினும் இருவருடங்களுக்கு முன் கட்சியின் பொருளாளராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்ட ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் முதல்வாராக பதவியேற்பார் என்ற கருத்து நிலவி வந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அழகிரி, கட்சியில் தனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி வந்தார்.

இதனால் முதல்வர் குடும்பம் ஸ்டாலின் மற்றும் அழகிரி என பிரிந்து இருந்தது. மேலும் 2ஜி விவகாரத்தால் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி கொடுத்த நெருக்கடிகளும் முதல்வரால் சமாளிக்க முடியவில்லை. ஆட்சியில் இருந்தும், மகளை காப்பாற்ற முடியவில்லை என்ற அதிருப்தியில் ராஜாத்தி அம்மாளும், மகளை காப்பாற்றுவதற்கு கட்சியை அடகு வைக்கிறார் என அழகிரியும் ஸ்டாலினும், மறைமுகமான நெருக்கடிகளை கருணாநிதிக்கு கொடுத்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன் பேட்டியளித்த கருணாநிதி, நடந்து முடிந்த சட்டமண்ற தேர்தலோடு கட்சி பணிக்கு திரும்ப போவதாக அறிவித்து இருந்தார். இதனால் திமுக ஆட்சியை பிடித்தால் ஸ்டாலின் தான் முதல்வர் என கட்சியினர் செய்திகளை வெளியிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த அழகிரி, திமுக ஆட்சியில் கருணாநிதி தான் மீண்டும் முதல்வர் என செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்தார். இதனால் மனம் வெறுத்து போன கருணாநிதி, தானே மீண்டும் முதல்வராக தொடர்வேன் என அறிவித்தார்.

தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடையே உள்ள அதிகார போட்டிக்கு தற்காலிக முற்றுபுள்ளி வந்துள்ளது. இதனால் கருணாநிதி உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருப்பார் என நம்பலாம்

தமிழக முதல்வராக எதிர்வரும் 15ம் திகதி பதவியேற்கிறார் ஜெயலலிதா!

தமிழ்நாட்டில் தனித்து ஆட்சி அமைக்கும் அ.தி.மு.க சார்பில், ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். எதிர்வரும் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இப்பதவி ஏற்பு வைபவம் இடம்பெறுகிறது.
இன்று நண்பகல் 12.50 மணியளவில் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியே வந்த ஜெயலலிதா, கார்டனில் குவிந்திருந்த ஆதரவாளர்களை பார்த்து கை அசைத்து வெற்றியை பகிர்ந்துகொண்டார்.

 எனினும் சிறிது நேரத்தில் அவர் உள்ளே சென்றுவிட்டார். இதுவரை வெளிவந்த முன்னணி நிலவரங்கள் படி, அதிமுக 198 இடங்களில் முன்னிலையில் இருப்பதுடன், திமுக 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

 இதேவேளை தமிழக தேர்தலில் அதிமுக : தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பகிர்ந்துகொண்டார்.

இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. இதன் மூலம் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்கள் அனுபவித்து வந்த பிரச்சினைகள் இனி மெல்ல மெல்ல குறைய தொடங்கும் என கூறினார். ஸ்பெக்ரம் வழக்கு திசை மாறு. தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


போயஸ் காடன் படம் : த ஹிந்து

வடிவேலுவின் வீட்டிற்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு!

தேர்தல் பிரசாரத்தின் ‌போது தி.மு.க., வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட நடிகர் வடிவேலுவின் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இன்று காலை முதல் மதுரை சத்ய சாய நகரில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், அவர்பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் காலத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன், தேமுதிக தலைவர் விஜகாந்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், நடிகர் வடிவேலுக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இருதரப்பிலும் கோர்ட்டுக்கும் சென்றனர்.சட்டமன்ற தேர்தலிலும் மோதல் எதிரொலித்தது. இந்நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வடிவேலு பிரசாரத்தில் குதித்தார்.  கூட்டங்களில் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேசினார். விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதிக்கும் சென்று அவரை திட்டி தீர்த்தார். வடிவேலு பிரசாரத்தில் பெரும் கூட்டம் கூடியது. ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் திரண்டனர். பெரும் தலைவர்களுக்கு இணையாக அவருக்கு கூட்டம் வந்தது. சுற்றுப்பயணம் முடிந்ததும் தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தற்போ அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் வீட்டில் இல்லை எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. விஜயகாந்த் ரசிகர்களால் வடிவேலு வீடு தாக்கப்படலாம் என செய்தி பரவியது. இதையடுத்து வட பழனி லோகையாகாலனியில் உள்ள அவரது வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தெருவில் இருபுறமும் போலீசார் நின்று அந்த வழியாக வருவோர், போவோரை நிறுத்தி விசாரித்து அனுப்புகின்றனர்.

தமிழகத்தில் தோல்வி : ஊழலுக்கு கிடைத்த தண்டனையா? காங்கிரஸிடம் போட்டுத் தாக்கியது NDTV (வீடியோ)

தமிழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக கூட்டணிக்கும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கும் காங்கிரஸ் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், திமுகவுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் ஓரளவு அனுமானித்ததே எனினும், தமிழ்நாட்டு தேர்தலில் திமுக : காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்திருப்பது, எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென என்.டி.டிவி செய்தி சேவை கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளித்த அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. எனினும் இத்தேர்தலில் திமுக தோல்வியடைந்திருப்பதற்கு எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக வின் வெற்றிக்கு மதிப்பளிக்கிறோம் என்றார்.

ஊழலுக்கு சரியான தண்டனையை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? என ஜெயந்தியிடம் கேள்வி எழுப்பபட்ட போது அவர் அளித்த பதில்களை காண வீடியோவை அழுத்துங்கள்


திமுகவுக்கு எதிரான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் : ஜெயலலிதா

 


திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் இத்தேர்தலில் காண்பித்துள்ளார் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா  கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது குறித்து இன்று மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். இதன் போது அவர் கூறியதாவது:

தேர்தல் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந்தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தேர்தலில் பணபலம் தோல்வி அடைந்துள்ளது.
தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர்தூக்கியே இருந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதிய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதனை நாமும் வலியுறுத்துவோம்.

தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் நலத்திட்டங்கள் மற்றும் நல்லாட்சிக்கு வித்திடும் வாக்குறுதிகளை கொண்ட ஒரு முழுமையான தேர்தல் அறிக்கையாக இருந்தது என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திய தேர்தல் கமிஷனுக்கு மனமார்ந்த் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னரே, நாங்கள் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.